Archives: ஆகஸ்ட் 2018

இடைவிடாமல் சேவைசெய்

இளைஞர்களிடம் தாலந்துகளை எப்படி உருவாக்குவது என்பதைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கல்வியியல் உளவியலாளர் பென்ஜமின் புளும் என்பவர், விளையாட்டு, ஓவியம், கல்வி என வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 120 பேரின் இளமைப் பருவத்தைக் குறித்து ஆராய்ந்தார். அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவானப் பண்பைக் கண்டறிந்தார். அனைவருமே தீவிரமான பயிற்சியை நீண்ட காலம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டு கொண்டார்.

ஓவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அதற்கு ஒழுங்கும், கிரமுமான பயிற்சி தேவை என புளும் தனது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்தார். நாம் தேவனோடு செலவிடும் நேரத்திலும் ஓர் ஒழுக்கத்தைக் கையாளுவதன் மூலம் ஆவிக்குரிய ஒழுக்கத்திலிருப்பது, நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையில் வளர வழிவகுக்கும்.

தேவனோடு ஒழுங்கு முறையைக் கையாண்டதில் தானியேல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். தானியேல் இளைஞனான போதிலும் கவனமாகவும், ஞானமாகவும் தீர்மானம் எடுக்க முடிந்தது (1:8). அவன் ஜெபம் செய்யவும் ஒழுங்கைக் கடைபிடித்தான். “தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்” (6:10).

அவன் அடிக்கடி தேவனைத் தேடிய போது, அவனுடைய விசுவாச வாழ்க்கையை அவனைச் சுற்றியிருந்தவர்கள். எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தரியு அரசன் தானியேலைக் குறித்து, “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” (வச. 20) எனவும், இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிறவன் எனவும் இருமுறை குறிப்பிடுகின்றான் (வச. 16,20).

தானியேல் போன்று நமக்கும் தேவனுடைய உதவி மிகவும் தேவை. தேவன் நம்மில் கிரியை செய்கிறார், எனவே நாம் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பது எத்தனை இன்பமானது! (பிலி. 2:13) எனவே நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரோடு நேரத்தைச் செலவிடும்போது, அவர்மீதுள்ள அன்பில் நிரம்பி வழியச் செய்வார், நமது ரட்சகரை புரிந்துகொள்வதிலும் அறிந்து கொள்வதிலும் வளர்வோம் (1:9-11).

மன்னித்து மறபோம்

மனம் பொருந்துதல் பற்றி ஒரு வட்ட மேசை விவாதத்தை ஆரம்பித்தபோது, ஒரு பங்காளர், “மக்கள் குற்றங்களை காலத்தில் உறையச் செய்யாதீர்கள்” என ஞானமாய் கூறினார். நாம் மக்கள் செய்யும் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் மாற்றமடைய வாய்ப்பு கொடுப்பதில்லை என அவர் கூறினார்.

பேதுருவின் வாழ்க்கையில் எத்தனையோ வேளைகளில் தேவன் அவரைப் “புறக்கணித்திருக்கலாம்.” ஆனால், தேவன் அவ்வாறு செய்யவில்லை. துடிப்பான சீடனான பேதுரு இயேசுவைத் “திருத்துகின்றான்”, விளைவாக இயேசுவிடமிருந்து வன்மையான கடிந்து கொள்ளலைச் சந்திக்கின்றான். (மத். 16:21-23). அவன் யாவருமறிய இயேசுவை மறுதலிக்கின்றான் (யோவா. 18:25-27). பின்னர், மனம்வருந்தி மீண்டெழுகிறான் (21:15-19). ஒரு முறை சபையில் ஜாதிபிரிவினைக்குக் காரணமாகிறான்.

கேபா என்றழைக்கப்படும் பேதுரு தன்னை புறஜாதியாரிடமிருந்து பிரித்து, விலக்கிக் கொண்டபோது இந்தக் காரியம் நிகழ்ந்தது (கலா. 2:11-12). சமீபத்தில் அவன் புறஜாதியாரோடே தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தான். ஆனால், சில யூதர்கள் வந்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் விருத்தசேதனம் அவசியம் என்று போதித்த போது, விருத்தசேதனமில்லாத புறஜாதியாரை பேதுரு தவிர்த்தான். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை நோக்கி, அவரது அபாயகரமானத் திரும்புதலைக் குறிக்கிறது. போதுருவின் இந்த நிலையை “மாய்மாலம்” என பவுல் குறிப்பிடுகின்றார் (வச. 13). பவுல் தைரியமாக எதிர்த்ததால், இந்தக் காரியம் தீர்க்கப்பட்டது. தேவன் நமக்களித்துள்ள அழகிய ஒரு மனதின் ஆவியைக் பெற்றவனாகப் பேதுரு தேவப் பணியைத் தொடர்ந்தான்.

ஒருவரும் தங்களுடைய மோசமான நேரங்களால் புறக்கணிக்கப்படுவதில்லை. தேவ கிருபையால் நாம் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து தேவ அன்பில் இணைந்து வளர்வோம்.

தாராளமாய்க் கொடுப்பவர்கள்

எங்களுடைய ஆலயச் சரித்திரத்தில், தேவன் தந்துள்ளவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து, எங்கள் சபைத் தலைவர், ஒரு புது தேவையை முன்வைத்தார். அது ஓர் உடற்பயிற்சிக் கூடம். எங்களுடைய சமுதாயத்தினருக்கு இன்னும் அதிகமாகச் சேவைசெய்ய, அது உதவியாக இருக்கும் என்றார். அந்தக் கட்டுமானத் தொகைக்காக, தலைவர்களின் அணி தங்கள் வாக்குறுதித் தொகையை முதலாவது எழுதினர். தன்னலம் என் இருதயத்தை நெருட, நான் ஏற்கனவே கொடுக்க நினைத்ததைத் தவிர அதிகமாக கொடுக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு ஜெபித்தேன். ஆனால், நானும் என் கணவனும் இத்திட்டத்திற்காக ஜெபிப்பதாக ஒத்துக் கொண்டோம். ஆனால், தேவன் எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதை நினைத்து, நாங்கள் மாதந்தோறும் ஒரு தொகையை இத்திட்டத்திற்குக் கொடுக்கத் தீர்மானித்தோம். எங்கள் சபையிலுள்ள குடும்பத்தினரின் கொடைகளால், அந்த முழுகட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவின்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கென்றே திறந்த போதிலும் அதனை பல்வேறு சமுதாய நிகழ்வுகளுக்கும் தேவன் பயன்படுத்தி வருவதைக் குறித்து நன்றியோடிருக்கிறோம். மற்றொரு தாராளமான கொடையாளர், தாவீது அரசனைக் குறித்து நினைவுகூருகின்றேன். தேவன் அவரைத் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படித் தெரிந்து கொள்ளவில்லையெனினும், தாவீது தன்னுடைய வருமானம் அனைத்தையும் அத்திட்டத்திற்கென சேமித்தான் (1 நாளா. 29:1-5) அவனோடு பணிபுரிந்த பிரபுக்களும், ஜனங்களும் மனப்பூர்வமாய் கொடுத்தனர் (வச. 6-9). நம்மைப் படைத்தவரும், தாங்கி வழி நடத்துபவரும், எல்லாவற்றிற்கும் சொந்தக்காரருமான தேவன், முன்பு தங்களுக்குக் கொடுத்ததிலிருந்து, மனப்பூர்வமாய் கொடுத்ததை ராஜா சேகரித்தான் (வச. 10-16).

நமக்குள்ளதெல்லாம் தேவனுக்கே சொந்தமானதென நாம் உணரும் போது, நன்றியோடும், தாராளமாயும், உண்மையாயும் மற்றவர் நலனுக்காகக் கொடுக்க முன்வருவோம். தேவன் மீண்டும் தருவார் என நம்புவோம். இந்த மனப்பூர்வமான கொடையால், நம்முடைய தேவைகளையும் பிறர் தாங்குவார்கள் என்பதையும் நம்புவோம்.

நாம் இயேசுவைக் காண்போம்

நான் எனது பிரசங்க பீடத்திலிருந்து அடக்க ஆராதனைக்கான ஜெபங்களைச் சொல்லிக் கொண்டே கீழே நோக்கிய போது ஒரு பித்தளை தகட்டில் யோவான் 12:21ல் உள்ள வாசகம் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன், “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்பதே அந்த வாசகம். நாம் கண்ணீரோடும், புன்னகையோடும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண், இதற்கு எத்தனைப் பொருத்தமானவள், நாம் இயேசுவை அவளில் கண்டோமே என நான் நினைத்துப்பார்த்தேன். அவள் தன் வாழ்வில், அநேக ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்த போதும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. தேவனுடைய ஆவியானவர் அவளில் வாசம் பண்ணியதாலேயே நாம் இவளில் இயேசுவைக் காண முடிந்தது.

இயேசு எருசலேமிற்குள் பயணம் செய்த போது, நடந்தவற்றை, யோவான் நினைவிற்குக் கொண்டுவருகிறான் (யோவா. 12:12-16). சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடனான பிலிப்புவிடம் வந்து, “ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்” (வச. 21). என்றனர். அவர்கள் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையும், அவர் செய்த அற்புதங்களையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே அவரைக் காண ஆவலாய் இருந்தனர். அவர்கள் யூதரல்லாததால் தேவாலயத்தின் உட்பிரகாரத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய வேண்டுதல் இயேசுவை அடைந்த போது, அவர் நான் மகிமைப்படும் நேரம் வந்துவிட்டது என தெரிவிக்கின்றார் (வச. 23). இதன் மூலம் அவர் அநேகருடைய பாவங்களுக்காக மரிக்கப் போகிறார் எனபதைக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றுவது யூதர்களுக்காக மட்டுமல்ல,
புறஜாதியினருக்காகவும் தான். (வச. 20). அப்பொழுது அவர்கள் இயேசுவைக் காண்பார்கள்.

இயேசு மரித்தபின்பு, அவரைப் பின்பற்றுபவர்களில் வாசம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் (14:16-17). அவர் நம்மில் வாசம் பண்ணி, செயல்படுவதாலேயே அவரில் அன்புகூரவும், அவருக்குப் பணி செய்யவும் முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவரும் நம்மில் இயேசுவைக் காண்கின்றனர். என்ன ஆச்சரியம்!

நிலைத்திருக்கும் மகிழ்ச்சி

நம்முடைய சொந்த வழியில் செயல்களைச் செய்வதாலேயே மகிழ்ச்சி கிடைக்கும் என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. அப்படிச் செய்வது வெறுமையையும், பதட்டத்தையும், தலைவலியையுமே தரும்.

மக்கள், தாங்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதே மகிழ்ச்சி எனக் கருதுவதாகக் கவிஞர் W.H. ஆடன் கூறுகின்றார். “பேய்கள் நிறைந்த காட்டில் தொலைந்து போனவர்கள், இரவைக் கண்டு பயந்த குழந்தைகள், இது வரை மகிழ்ச்சியையும், நல்லதையும் காணாதவர்கள்” என இவர்களைப் பற்றி எழுதுகின்றார்.

நம்முடைய பயத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்கும் தீர்வு என்ன என்பதை சங்கீதக்காரன் தாவீது பாடலாகத் தருகின்றார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). தேவன் விரும்பும் வகையில் காரியங்களைச் செய்வதே மகிழ்ச்சியாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க முடியும். “அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;” என தாவீது எழுதுகின்றார் (வச. 5). இதனை நீ முயற்சி செய்து பார், நீயே தெரிந்து கொள்வாய். இதனையே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (வச. 8) என தாவீது கூறுகின்றார்.

“காண்பவை நம்பக் கூடியவை” என நாம் சொல்கின்றோம். இப்படித்தான் இவ்வுலகக் காரியங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். அதற்கான நிரூபணத்தைக் காட்டு, நான் நம்புகிறேன் என்கின்றோம். ஆனால், தேவன் அதனை மாற்றிச் சொல்கின்றார். நம்புகிறவற்றையே நாம் காண்கின்றோம். “ருசிபார் அப்பொழுது உனக்குத் தெரியும்” என்கின்றார் தேவன்.

தேவனுடைய வார்த்தையை நம்பு, தேவன் உனக்கு என்ன கட்டளையிடுகிறாரோ, அதைச் செய், அப்பொழுது காண்பாய். சரியானவற்றைச் செய்ய அவருடைய கிருபையைத் தருகின்றார். அதற்கும் மேலாக அவர் உனக்காகத் தம்மையே தந்தார். அது ஒன்றுதான் நன்மைக்கெல்லாம் ஊற்று. அதிலிருந்துதான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.